Share via:
மறைந்த இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து ஒரு அருமையான மனிதர் என்றும், அவருடைய மறைவு எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது என்றும் நடிகர் ரஜினிகாந்த் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட மாரிமுத்து (57) டப்பிங் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய நிலையில், இன்று காலை திடீர் மாரமடைப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட மாரிமுத்துவின் உயிர் பிரிந்தது.
மறைந்த நடிகர் மாரிமுத்து தனது 20 வருட திரைப்பயணத்தில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தும், 2 திரைப்படங்களை இயக்கியும் தனது திறமையால் ரசிகர்களை தன்பக்கம் கவர்ந்தார்.
அதிலும் குறிப்பாக சன்டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலின் மகத்தான வெற்றிக்கு நடிகர் மாரிமுத்துவின் பங்கு மிகப்பெரியது. அவரது இடத்தை யாராலும் ஈடுகட்ட முடியாது என்று ரசிகர்கள் தற்போது வருத்தத்துடன் தெரிவித்து வருகின்றனர்.
மறைந்த நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது இரங்கலை பதிவிட்டுள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் மாரிமுத்து முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். அப்போது ரஜினிகாந்துடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை மாரிமுத்து பல்வேறு சேனல்களிலும், பத்திரிகைகளிலும் பகிர்ந்து கொண்டார்.
ரஜினிகாந்த் ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.

