Share via:
ஐப்பசி மாத பூஜையை முன்னிட்டு வருகிற அக்டோபர் மாதம் 17ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைதிறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தமிழ் மாதங்களில் முதல் 5 நாட்களுக்கு நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி வருகிற ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவிலின் நடை வருகிற 17ம் தேதி திறக்கப்படுகிறது. மாலை 5.30மணியளவில் தந்திரி கண்டாரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன நம்பூதரி நடையை திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து குத்துவிளக்கேற்றி தீபராதனையும் காட்டி பூஜையை தொடங்கி வைக்கிறார்.
அதன் தொடர்ச்சியாக அதற்கு அடுத்த நாளான 18ம் தேதி முதல் தொடர்ந்து 5 நாட்கள் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். அப்போது நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு வருகிற 22ம் தேதி அத்தாழ பூஜைக்கு பின்னர் அரிவராசனம் பாடல் இசையுடன் இரவு 10 மணியளவில் நடை மீண்டும் அடைக்கப்படுகிறது.
ஐப்பசி மாத பூஜையில் கலந்து கொள்ள பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையிலேயே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் பக்தர்களின் வசதிக்காக சபரிமலைக்கு கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

