Share via:
இஸ்ரேல் தொடர்ந்து காசா மீது தாக்குதல் நடத்தினால் எங்களிடம் இருக்கும் பிணைக்கைதிகளை கொலை செய்து டிவியில் நேரலையில் ஒளிபரப்புவோம் என ஹமாஸ் மிரட்டல்விடுத்துள்ளது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன ஹமாஸ் குழுவுக்கும் இடையிலான போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து பல உயிர்களை பலி வாங்கி வருகிறது. இஸ்ரேல் நாட்டில் ஊடுருவியுள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளை இஸ்ரேல் ராணுவம் சுட்டுவீழ்த்தி வருகிறது. அதன்படி 1,500 ஹமாஸ் தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தியாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
3 லட்சம் வீரர்கள் தயாராக உள்ள நிலையில், கடல் வழியாக தற்போது தாக்குதலை தொடங்கி காசாவில் உள்ள மக்களை வெளியேறும்படி இஸ்ரேல் ராணுவம் வலியுறுத்தியுள்ளது. அதன்படி காசாவை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கிடையில் லெபனான் நாட்டின் எல்லையிலும் இஸ்ரேல் தனது ராணுவத்தை குவித்து வருகிறது.
இந்நிலையில் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் பிணைக்கைதிகளை கொலை செய்வோம் என்று எச்சரித்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், அதனை டிவியில் நேரடியாக ஒளிபரப்புவோம் என்று மிரட்டியுள்ளது. தாக்குதல் களத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் மக்களை மருத்துவக் குழுவினர் தங்கள் உயிரை பணயம் வைத்து காப்பாற்றி வரும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகி கண்களை கலங்க செய்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் சர்வதேச நாடுகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

