Share via:
ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் இன்று (அக்.5) கோலாகலமாக தொடங்க உள்ளது.
ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 13வது சீசன் இன்று (அக்.5) இந்தியாவில் கோலாகலமாக தொடங்க உள்ளது. உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டித் தொடர் வருகிற நவம்பர் 19ம் தேதி வரை 46 நாட்கள் நடைபெறுகிறது.
இப்போட்டித் தொடரில் இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் மோதுகின்றன.
நடப்பு சாம்பியனாக இங்கிலாந்து உள்ள நிலையில, ஆஸ்திரேலியா 5 முறையும், இந்தியா 2 முறை, பாகிஸ்தான், இலங்கை அணிகள் தலா ஒருமுறை, நியூசிலாந்து 2 முறை என தொடரை கைப்பற்றியுள்ள நிலையில் 13வது சீசனை வெல்லப் போகும் அணி எது என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
லீக் சுற்றில் 10 அணிகளும் ரவுண்ட் ராபின் முறையில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத உள்ளன. இதில் பெறும் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற உள்ளன.
அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெறும் திருவிழாவின் தொடக்க ஆட்டத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது. மைதானத்தில் மொத்தம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து ரசிக்க அனைத்து முன்னேற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளன.
அதன்படி வருகிற அக்டோபர் 8ம் தேதி இந்தியா தனது முதல் ஆட்டத்தை சென்னை சேப்பாக்கத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள உள்ளது. அரையிறுதிப் போட்டி நவம்பர் 15ம் தேதி மும்பையில் நடைபெற உள்ள நிலையில, 2வது அரையிறுதிப் போட்டி அதற்கு அடுத்த நாளான நவம்பர் 16ம் தேதி கொல்கத்தாவிலும் நடைபெற உள்ளது. இறுதிப்போட்டி நவம்பர் 19ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.33 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது. 2வது இடத்தை பெறும் அணி ரூ.16.50 கோடியை தனக்கு சொந்தமாக்க உள்ளது. அதோடு 2 அரையிறுதியில் தோல்வியடையும் அணிகளுக்கு தலா ரூ.6.50 கோடியும் பரிசாக வழங்கப்படும் என்று ஐசிசி தரப்பில் அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

