Share via:
பிரபல பாடகியான சின்மயி தான் விபத்தில் சிக்கியதாக இணையத்தில் பதிவிட்ட தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாக்களின் பின்னணி பாடகியாகவும், சமந்தா உள்ளிட்ட நடிகைகளுக்கு டப்பிங் கொடுப்பவருமாக பிசியாக இருப்பவர் பாடகி சின்மயி. இவர் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் பாடகியாக அறிமுகமானார்.
ஒரு பாடகியாக மட்டுமல்லாமல், மீடூவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் பாடகி சின்மயி, தனது எக்ஸ் பக்கத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நேற்று தனது இரட்டை குழந்தைகளுடன் சின்மயி காரில் சென்று கொண்டிருந்த போது, ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வந்து மோதிவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அந்த ஆட்டோ ஓட்டுநர் குடி போதையில் இருந்ததாக தெரிவித்த சின்மயி, இந்த விபத்தில் தனக்கோ தன்னுடன் இருந்தவர்களுக்கோ, குழந்தைகளுக்கோ எந்த பாதிப்பும் இல்லை என்றும் பதிவிட்டிருந்தார். தாங்கள் பத்திரமாக தப்பித்ததை நினைத்து மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்த அவரது பதிவை பார்த்த ரசிகர்கள், அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மேலும் ‘குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள்’’ என்று சின்மயி பதிவிட்டுள்ளது தற்போது இணையத்தில் டிரெண்டிங்காகி வருகிறது.

