Share via:
வந்தாரை எல்லாம் வரவேற்றுக் கொண்டிருந்த விஜய் கட்சியினர், முதன்முறையாக
முன்னாள் அமைச்சர் விஜய்பாஸ்கரை கட்சியில் சேர்க்க வேண்டாம் என்று குரல் கொடுக்கத்
தொடங்கியிருக்கிறார்கள்.
அதிமுக தலைமையிடம் முரண்பாடுடன் இருந்த விஜயபாஸ்கர் அடுத்தகட்ட
நடவடிக்கை குறித்து தொகுதி மக்களிடமும், ஆதரவாளர்களிடமும் தொடர்ச்சியாக கருத்து கேட்டு
வந்தார். இந்த நிலையில், சபாநாயகர் ஜே. சி. டி. பிரபாகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை
அளித்தார். உடனடியாக அவரது ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விஜயபாஸ்கர் மீது எக்கச்சக்க வழக்குகள் இருப்பதால்
தவெகவின் தூய சக்தி என்ற பிம்பம் உடைந்துவிடும், எனவே, இவரை சேர்க்க வேண்டாம் என்று
கட்சியினர் சோஷியல் மீடியாவில் பேசுகிறார்கள்.
விஜயபாஸ்கர் மீது ஐந்து முக்கியமான வழக்குகள் உள்ளன. அதாவது 35.79
கோடி ரூபாய் அளவிற்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக தமிழக அரசின்
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை அதிமுக ஆட்சியின் போது உற்பத்தி
செய்யவும், விற்பனை செய்யவும் அனுமதித்ததாக குற்றம்சாட்டப்பட்டு டெல்லி சிபிஐ வழக்குப்பதிவு
செய்து விசாரித்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் மருத்துவக் கல்லூரியின் புதிய
மருத்துவமனைக்கு விதிகளை மீறி சான்றிதழ் வழங்கிய புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு
செய்து விசாரிக்கிறது.
ஆர். கே. நகர் இடைத்தேர்தலின் போது டிடிவி தினகரன் வெற்றி பெறுவதற்கு
பணப்பட்டுவாடா செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதிலும் சி. விஜயபாஸ்கர் பெயர் இடம்பெற்றுள்ளது.
கொரோனா காலகட்டத்தில் மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக
குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அப்போது சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சி.
விஜயபாஸ்கர். இதிலும் சிக்கல் நீடித்து வருகிறது. இதுதவிர மேலும் சில வழக்குகளும் நிலுவையில்
இருக்கின்றன.
அதனாலே இவ்வளவு வழக்குகளுடன் ஒருவரை தங்கள் கட்சியில் சேர்க்க
தவெக விரும்பவில்லை என்கின்றனர். ஏற்கெனவே திமுகவில் இவருக்கு நோ என்று சொல்லிவிட்டார்கள்.
அதனால் எப்படியாவது விஜய் கட்சியில் இணைவதில் உறுதியாக இருக்கிறார்.
இதுவரை அதிமுகவில் இருந்து வெளியேறியவர்கள் இனி வெளியேறப்போகிறவர்கள்
அனைவரும் ஆளுங்கட்சி என்கிற அதிகாரம் இல்லாமல் அவர்களின் தொழிலை செய்யவே முடியாது என்பதாலே
கட்சி மாறுகிறார்கள். பெரும்பாலோர் மணல் குவாரிகள்,
பார்கள், சாலை விரிவாக்க ஒப்பந்தங்கள், முறைகேடாக கல்வி நிலையங்கள் நடத்துகிறார்கள்.
இவர்களது தொழிலுக்கு எந்த தடையும் வந்து விடக்கூடாது என்பதால் வெளியேறுகிறார்கள். இவர்களது நோக்கம் பணம்
சம்பாதிப்பது மட்டுமே இயக்கத்தின் மீது எப்போதும் விசுவாசமாக இருக்கமாட்டார்கள் என்று
அதிமுகவினர் கூறுகிறார்கள்.
தூய சக்தி விஜய் என்ன சொல்லப்போகிறார்..?
