Share via:
கூட்டுறவு வங்கிகளின் மூலம் 75,000 வரை பயிர் கடன்
பெற்ற சிறு, குறு மற்றும் இதர விவசாயிகளுக்கு 100% முழுமையாக பயிர் கடன் தள்ளுபடி செய்வதாக
இன்று விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 50 ஆயிரம் என்று இருப்பதை 75 ஆயிரம் என்று
உயர்த்துவது போதாது, முழு தள்ளுபடி வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.
இதுகுறித்து பேசும் விவசாயிகள், வாக்குறுதியில் கூறப்பட்டது
போன்று முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக தள்ளுபை செய்வதை
ஏற்கமுடியாது என்கிறார்கள்.
இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி, ‘’தமிழ்நாடு
அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் ரூ.75000 வரை கடன் வாங்கிய சிறு , குறு மற்றும்
பெரு விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளின் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்
என்றும், அதற்கும் கூடுதலாக வாங்கிய விவசாயிகளின் கடனில் ரூ.35,000 வரை தள்ளுபடி செய்யப்படும்
என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால் கூடுதலாக
21 ஆயிரம் பேர் மட்டுமே பயனடைவார்கள். கூட்டுறவு வங்கிகளில் சிறு மற்றும் குறு விவசாயிகள்
வாங்கிய கடனின் அளவு திரும்ப செலுத்த முடியாத அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், அவற்றை
முழுமையாக தள்ளுபடி செய்தால் மட்டும் தான் அவர்களுக்கு பயன் கிடைக்கும். அதை விடுத்து
6.22 லட்சம் பேருக்கு மட்டுமே முழுமையாக கடனை தள்ளுபடி செய்து விட்டு, மீதமுள்ள
8.21 லட்சம் விவசாயிகளுக்கு வெறும் ரூ.35000 மட்டும் கடன் தள்ளுபடி செய்வது நியாயமல்ல.
2026&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல்
அறிக்கையில் பயிர்க்கடன் தள்ளுபடி பற்றி வாக்குறுதி அளித்திருந்த த.வெ.க., 5 ஏக்கர்
வரை நிலம் வைத்திருக்கும் உழவர்கள் வாங்கியக் கடன் முழுமையாகவும், அதற்கு மேல் நிலம்
வைத்துள்ள விவசாயிகள் வாங்கிய கடனில் 50 விழுக்காடும் தள்ளுபடி செய்யப்படும் என்று
கூறியிருந்தது. அதை நிறைவேற்றுவது தான் அறமாக இருக்கும்.
இந்திய ரிசர்வ் வங்கி, நபார்ட் வங்கி ஆகியவற்றின்
விதிகளை காரணம் காட்டி உழவர்களின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய மறுப்பது நியாயமல்ல.
கடந்த மே 25-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில் ரு.2044 கோடி அளவுக்கு மட்டுமே கடன்
தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இப்போது அதன் அளவு ரூ.5932 கோடியாக அதிகரித்துள்ளது.
கடன் தள்ளுபடியை இந்த அளவுக்கு உயர்த்த அனுமதிக்கும் விதிகளும், நிதிநிலையும், குறைந்தபட்சம்
சிறு மற்றும் குறு விவசாயிகளின் கடனையாவது முழுமையாக தள்ளுபடி செய்ய அனுமதிக்காதா?
மனமிருந்தால் மார்க்கம் உண்டு.
தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தவாறு சிறு மற்றும்
குறு விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களை முழுமையாகவும், நடுத்தர மற்றும் பெரு விவசாயிகள்
வாங்கிய பயிர்க்கடனில் 50 விழுக்காட்டையும் தள்ளுபடி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்..’’
என்று கேட்டிருக்கிறார்.