Share via:
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 9 நாட்களாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவ நிறைவு நாளை முன்னிட்டு திரளான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவ விழா கடந்த 18ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதன்படி 9 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு பல்வேறு அலங்கார, ஆராதனைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. இதனை காண ஒவ்வொரு நாளும் திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
அந்த வகையில் சென்னையில் இருந்து பயணம் செய்த திருக்குடைகள் திருப்பதி பிரம்மோற்சவத்தில் காணிக்கையாக செலுத்தப்பட்டது. திருப்பூரைச் சேர்ந்தவர் உலர் பழங்கள் மற்றும் சந்தனத்தால் ஆன அலங்கார பூஜை பொருட்களை சமர்ப்பணம் செய்து பிரம்மோற்சவத்தை மேலும் சிறக்கச் செய்தார்.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்று வந்த பிரம்மோற்சவ விழா நிறைவு நாளை முன்னிட்டு உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேசதராக கோவிலில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்தனர்.
பிரம்மோற்சவ நிறைவுநாளை (இன்று செப்.26) முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கோவிலில் இருந்து புறப்பட்டு மண்டபத்தை அடைந்த நிலையில் உடன் சக்கரத்தாழ்வாரும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
உற்சவர்களுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் 6 மணியளவில் திருக்குளத்திற்குள் அழைத்து செல்லப்பட்ட சக்கரத்தாழ்வாரை 3 முறை நீருக்குள் மூழ்க செய்த அர்ச்சகர்கள் சக்கர ஸ்நானம் நடத்தினர். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்களும் திருக்குளத்தில் புனித நீராடினார்கள். அதைத்தொடர்ந்து இன்று இரவு 9 மணியளவில் கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீவேதாந்த தேசிகர் பிரம்மோற்சவ விழாவில் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

