Share via:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனவும், கட்சிகளுக்கு இடையில்
காவல் துறை பாகுபாடு பார்க்கிறது எனவும் அதிமுக தொடங்கி விஜய் வரையிலும் தொடர்ந்து
குற்றச்சாட்டு வைத்துவந்த நிலையில், நேற்று தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு போட்டது.
அதன்படி, தமிழக காவல் துறையின் சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக இருந்த
ஜி.வெங்கடராமன் மாற்றப்பட்டு அவருக்கு பதில், காவல் உயர்பயிற்சியக டிஜிபியாக இருந்த
சந்தீப் ராய் ரத்தோரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இன்று
தமிழக காவல்துறையின் புதிய சட்டம் & ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் பொறுப்பேற்றுக்
கொண்டார்.
இதுதவிர, தாம்பரம் காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் மாற்றப்பட்டு, அவருக்கு
பதிலாக சஞ்சய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை காவல் ஆணையராக இருந்த ஜெ.லோகநாதனுக்கு
பதிலாக அபிஷேக் தீக்ஷித் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த சரவண
சுந்தர் மாற்றப்பட்டு, அந்த இடத்துக்கு குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக இருந்த ரம்யா பாரதி
நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல, சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த பிருந்தா தேவிக்கு பதிலாக
அருண் தம்புராஜ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத்துக்கு பதிலாக விசு மகாஜன்
நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவையும் தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது.
தேர்தல் தொடர்பான புகார்கள் வந்ததை அடுத்து, விருதுநகர், நாமக்கல்,
கரூர் உட்பட 8 மாவட்ட எஸ்பிக்கள் ஏற்கெனவே மாற்றப்பட்டுள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தல்
நெருங்கும் நிலையில், விரைவில் மேலும் பல ஐஏஎஸ் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள்
மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.
1992 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான சந்தீப் ராய் ரத்தோர், தற்போது
பயிற்சிக் கல்லூரி டிஜிபியாக உள்ளார். சந்தீப் ராய் ரத்தோர் அடுத்த ஆறு மாதங்களுக்குள்
ஓய்வுபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியைச் சேர்ந்த சந்தீப் ராய் ரத்தோர் 1992-ம் ஆண்டு தமிழக
கேடர் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானவர். தமிழக காவல் துறையில் பல முக்கிய பொறுப்புகள்,
குறிப்பாக சிபிசிஐடி மற்றும் சிஐஎஸ்எஃப் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.
கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ததில் முக்கியப்
பங்காற்றினார்.
ஆவடி காவல் ஆணையரகத்தின் முதல் ஆணையராக நியமிக்கப்பட்டார். பின்னர்,
சென்னை காவல் ஆணையராகப் பணியாற்றியவர், 2024 ஜூலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகு,
காவல் உயர் பயிற்சியகத்துக்கு மாற்றப்பட்டார். சிறந்த பணிக்கான மத்திய, மாநில அரசுகளின்
பதக்கங்களைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.