Share via:
அதிமுக கூட்டணியில் 40 தொகுதிகள் எதிர்பார்த்த பாஜவுக்கு 27 தொகுதிகளே
கிடைத்துள்ளது. இதில் அண்ணாமலைக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் சீட் இல்லை என்பதால்
பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் இழுபறி நீடிக்கிறது.
கோவையில் சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கிணத்துக்கடவு
ஆகிய தொகுதிகளைக் குறிவைத்து அண்ணாமலை தரப்பு வேலை செய்து வந்தது. இதற்கிடையில், கோவை
தெற்கு எம்எல்ஏவாக இருக்கும் வானதி சீனிவாசன், இந்த முறை வடக்கு தொகுதியைக் கைப்பற்றும்
முனைப்பில் காய்களை நகர்த்தினார்.
இந்தசூழலில்தான், அதிமுக கூட்டணியில் கோவை வடக்கு மட்டுமே பாஜகவுக்கு
ஒதுக்கப்பட்டது. வெற்றி வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்ட பல முக்கியத் தொகுதிகள் ஒதுக்கப்படாதது
பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. குறிப்பாக, அண்ணாமலை போட்டியிட விரும்பிய தொகுதிகள்
பட்டியலில் இல்லை.
இந்நிலையில் தான் பியூஷ் கோயல் சென்னை வந்து நேற்று நடத்திய மையக்குழு
கூட்டத்தில், அண்ணாமலையை கட்டாயம் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதையடுத்து,
புதுச்சேரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அண்ணாமலை சென்னை வந்து பங்கேற்றார். கூட்டத்தில்
பங்கேற்ற அண்ணாமலை, தமிழக பாஜக தலைவர்கள் அதிமுக தலைமையிடம் உரிய முறையில் பேசி தொகுதிகளை
பெறவில்லை.
கோவை மற்றும் சென்னை மாவட்டத்தில் கூடுதல் தொகுதிகளை நாம் பெற்றிருக்க
வேண்டுமென்று கூறினார். இதையடுத்து பழனிசாமியிடம் பேசி, சென்னை, கோவையில் சில தொகுதிகளை
மாற்றுவதாக பியூஷ் கோயல், அவரை சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது. அதேநேரம் தொகுதிகளை
மாற்றுவதற்கு அதிமுக தரப்பில் ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் அண்ணாமலைக்கு தொகுதி ஒதுக்குவதில்
சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அண்ணாமலையை வரவழைக்கவே ஒரு சாக்காக வைத்து, ‘குற்றவாளிக்கூண்டில்
ஸ்டாலின்’ என்று புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்டாலின் மீது எந்த நடவடிக்கையும் பாஜக
எடுக்காது என்று அவர்களது கட்சியினரே பதிவிடுகிறார்கள்.
பாஜக நேரு மீது நடவடிக்கையும் இல்லை. பாஜக மேற்கு வங்கத்தில் காட்டும்
தீவிர நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் இல்லை. டாஸ்மாக் பணத்தில் படமும் எடுத்து ரீலிஸ்
பண்ணிட்டாங்க. டிஜிபி இன்னும் போடவில்லை. புத்தகம் வெளியிட்டு என்ன ஆகப்போகிறது என்கிறார்கள்.
அண்ணாமலையின் நிலவரம் நாளைக்குள் தெரிந்துவிடும்.
