Share via:
தொகுதி வரையறை தொடர்பாக முதல்வர் விஜய் கூட்டத்துக்கு வராமல் டிமிக்கி
கொடுத்த திமுகவின் நிலைப்பாட்டை அறிவதற்கு இன்று சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதில் வேறுவழியின்றி விஜய் தீர்மானத்தை ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் உதயநிதி.
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக முதல்வர் விஜய் சட்டமன்றத்தில்
தனி தீர்மானத்தை கொண்டு வந்து உரையாற்றினார். அப்போது அவர், “2011 மக்கள் தொகை அடிப்படையில்
தொகுதி மறுவரையறை கூடாது. சமீபத்தில் சென்னை கலைவாணர் அரங்கில் தமிழகத்தின் மக்களவை
எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் இந்த தொகுதி மறுவரையின் சாதக பாதகங்கள் குறித்து
விரிவாக ஆலோசனைகள் நடத்தப்பட்டது. குறிப்பாக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள், தொகுதி
மறு வரையறையால் என்ன மாதிரியான சிக்கல்கள் வரும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
1971க்கு பிந்தைய மக்கள் தொகை கணக்கெடுக்கின்படி தொகுதி மறுவரையறை நடந்தால் தமிழ்நாட்டுக்கு
பாதிப்பு தான் என்பது தெளிவாக தெரிகிறது.
எனவே, மக்களவை தொகுதிகளில் எண்ணிக்கை 543 என்ற அளவில் நிரந்தமாக்கபட
வேண்டும். அதில், மகளிருக்காக அறிவிக்கப்பட்ட இடஒதுக்கீடை வரும் 2029 தேர்தலிலே கொண்டு
வரவேண்டும். நம்ம வீட்டில் இருக்கிற அம்மா, அக்கா, தங்கைக்கான தீர்மானம் இது. நான்
இந்த இடத்தில் நிற்க பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள்தான் காரணம். அந்த நன்றியோடு இந்த
தீர்மானத்தை கொண்டு வருகிறேன்.
அறிவியல், நீதி, நிர்வாகம் என எல்லா துறைகளிலும் தமிழக பெண்கள்
சாதித்து வருகிறார்கள். அந்த பெண்கள் அரசியலிலும் வெல்ல வேண்டும். மக்கள் தொகையில்
பெண்கள்தான் அதிகம். வாக்காளராக பெண்கள்தான் அதிகம். ஆனால், அரசியலில் அவர்களுக்கான
இடம் குறைவாக இருக்கிறது.
2021 இல் 12 பெண் எம்.எல்.ஏக்கள் அவையில் இருந்தனர். இப்போது
23 பெண் எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். ஆனாலும் சதவீதமாக பெண்களின் பிரதிநிதித்துவம்
பெரிதாக உயரவில்லை. தொகுதி மறுவரையறையோடு பெண்களுக்கான தொகுதி ஒதுக்கீட்டோடு இணைத்து
அதை தள்ளிப்போடக்கூடாது. தவெக அரசு பெண்களுக்கான அரசு. இங்கே 4 பெண் அமைச்சர்கள் இருக்கிறார்கள்.
சிங்கப்பெண் படை இருக்கிறது. பெண்களுக்கான தொகுதி ஒதுக்கீடு சலுகை அல்ல. அவர்களின்
ஜனநாயக உரிமை இது. ஒரு பெண் அதிகாரம் பெறும் போது குடும்பம் உயருகிறது. ஆயிரம் பெண்கள்
அதிகாரம் பெறும் போது நாடே உயரும்…’’ என்றார்,
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், ’’தொகுதி மறுவரையால்
தமிழகம் பாதிக்கப்படக்கூடாது என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பின்
படி தொகுதி மாற்றியமைக்கப்பட்டால் என்ன பாதிப்பு வரும் என இந்தியாவிலேயே முதல் முறையாக
பேசியது எங்களின் தலைவர்தான். எனவே,தொகுதி மறு சீரமைப்பு மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு
தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்திற்கு ஆதரவு என்று பேரவையில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி
ஸ்டாலின் பேசினார்.
அதேநேரம், எடப்பாடி பழனிசாமி இந்த தீர்மானத்தை எதிர்த்திருக்கிறார்.
‘’தமிழ்நாட்டுக்கு தற்போது 39 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். தொகுதி மறுவரையறையில் தமிழகத்தின்
7.18% விகிதாச்சாரம் குறையக்கூடாது என்றுதான் எங்களின் தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டிருந்தோம்.
தமிழகத்தினுடைய விகிதாச்சாரம் பாதிக்கப்படாது என உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில்
உறுதி கொடுத்திருக்கிறார். தமிழகத்தின் இப்போதைய எம்.பி எண்ணிக்கை குறையாமல் 50% இடங்கள்
அதிகரிக்கப்படுவதை ஆதரிக்கிறோம்.
அதிமுக ஆட்சியில் இருந்த போது 6 மாவட்டங்களை நிர்வாக காரணங்களுக்காக
பிரித்தோம். புதுச்சேரியில் 10 லட்சம் மக்கள்தான் இருக்கிறார்கள். அங்கே ஒரு முதல்வரே
இருக்கிறார். புதுச்சேரியை விட அதிக மக்கள் தொகையை கொண்ட நாடாளுமன்ற தொகுதிகள் தமிழகத்தில்
இருக்கிறது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் மக்கள் தொகை மட்டும் 20 லட்சம்.
1998 லேயே நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கான இட
ஒதுக்கீட்டுக்காக அதிமுக போராடியிருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளில் 50% இடத்தை பெண்களுக்கு
கொடுத்ததும் அதிமுக ஆட்சியில்தான்.
தொகுதிமறுவரையறை மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான
அறிகுறியே இல்லை. மசோதாவில் தமிழகத்துக்கு என்ன இருக்கிறது என்பதை அறியாமலேயே அவசரக்கதியில்
கொண்டு வரப்படும் இந்த தீர்மானத்தை எதிர்க்கிறோம். அதேநேரத்தில் நாடாளுமன்றத்திலும்
சட்டமன்றத்திலும் பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு கோரும் தீர்மானத்தை மட்டும் ஆதரிக்கிறோம்.”
என்றார்.
தொகுதி வரையறை விவகாரத்தில் தமிழகத்தை முன்கூட்டியே எதிர்ப்பு
தெரிவிக்கும் நிலைக்குத் தள்ளி செக் வைத்திருக்கிறார் விஜய்.