Share via:
விஜய் இன்றைய பரப்புரையிலும் பின்னே சென்ற வாகனங்கள் கீழே விழுந்து
பலர் காயமடைந்துள்ளனர். பின் தொடர வேண்டாம் என்று விஜய் கேட்டுக்கொண்டாலும், ரசிகர்கள்
தொடரத்தான் செய்கிறார்கள்.
நெல்லை கேடிசி நகரில் இன்று நடைபெறும் பரப்புரை பொதுக்கூட்டத்தில்
பங்கேற்பதற்கு வருகை தந்திருக்கிறார் விஜய். இன்று திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில்
உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பரப்புரை
மேற்கொள்கிறார்.
இந்த நிலையில் ரஜினியின் பேச்சு விஜய் ஆதரவாளர்களை மீண்டும் சூடாக்கியுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், “கமலுடன் இணைந்து
நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கவிருக்கிறது. ‘ஜெயிலர்’
திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு நாட்கள் உள்ளது. படம் வெளியிடக்கூடிய தேதியை
தயாரிப்பு நிறுவனமே முடிவு செய்யும்” என்றார்.
ஜனநாயகன் திரைப்படம் குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என்ற
ரஜினிகாந்த், ‘’நடிகர்களின் பின்னால் செல்லும் இளைஞர்கள் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க
வேண்டும். அவர்களுக்கு ஏதாவது அடிபட்டால் அவர்களுக்குத்தானே காயம் ஆகும். படிக்கிற
வயதில் முதலில் படிப்பில்தான் கவனம் செலுத்த வேண்டும். அந்த நேரத்தை விட்டால் அவர்கள்
வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட வேண்டிய நிலை ஏற்படும். படிப்பில் மட்டும்தான் அவர்களுடைய
சிந்தனை செயல் இருக்க வேண்டும்.
முதலில் உடல்நிலை மற்றும் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ள வேண்டும்.
இளைஞர்களுக்கு நான் கொடுக்கக்கூடிய அறிவுரை என்னவென்றால் குடிப்பழக்கம், கஞ்சா உள்ளிட்டதற்கு
அடிமையாகி விடக்கூடாது. அப்படி சென்றால் அவருடைய வாழ்க்கையை கெட்டுப் போய்விடும். நீங்கள்
மட்டுமல்லாமல் உங்களை சம்பந்தப்பட்ட தாய், தந்தை மற்றும் அனைவரின் வாழ்க்கையும் நரகமாக்கி
விடும். அப்படிப்பட்ட நண்பர்களின் நீங்கள் அருகில் கூட சென்று விடாதீர்கள்” என
கூறினார்.
விஜய்க்கு அருகே போகக்கூடாது என்று சொல்கிறார் என்று வழக்கம்போல்
ரஜினி மீது பாய்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.
