Share via:
இன்று காலை நம்பிக்கையுடன் வாக்களித்துவந்தார் விஜய். இதையடுத்து,
இன்று தேர்தல் ஆணையத்துக்கு ஒரு அவசரக் கடிதம் எழுதியிருக்கிறார்.
அந்த கடிதத்தில், ‘’சென்னையிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு வாக்களிக்க
புறப்பட்டுச் சென்ற மக்கள் முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் கடும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர்.
பல்லாயிரக்கணக்கான வாக்காளர்கள் பேருந்து நிலையங்களில் தவிப்பதும்,
பொதுப் போக்குவரத்து வசதி இல்லாததும் வெறும் நிர்வாகக் குறைபாடு மட்டுமல்ல; இது இந்திய
அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை வாக்குரிமையின் மீது நடத்தப்படும் தாக்குதலாகவே
தெரிகிறது.
சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் மற்றும் பிற நகரங்களில்
உள்ள பேருந்து முனையங்களில் நிலவும் காட்சிகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. உலகின் பல்வேறு
பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் வந்துள்ள வாக்காளர்கள் தங்களின்
ஜனநாயகக் கடமையை ஆற்ற முடியாமல் தவிக்கின்றனர்.
தேர்தல் பணிக்காக அதிகப்படியான பேருந்துகள் பயன்படுத்தப்பட்ட நிலையில்,
பொதுமக்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படாதது ஒரு திட்டமிட்ட தோல்வியாகும். இது
இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 324-ன் படி, சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலை
நடத்த வேண்டிய தேர்தல் ஆணையத்தின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்குகிறது.
எனவே, தேர்தல் ஆணையம், மாநிலப் போக்குவரத்துத் துறை மற்றும்
மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவிட்டு, பேருந்து நிலையங்களில் தவிக்கும்
வாக்காளர்களை வாக்குச் சாவடிகளுக்கு அழைத்துச் செல்ல கூடுதல் பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகளை
இயக்க வேண்டும். இது குறித்த அறிவிப்புகளை ஊடகங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயலிகள்
மூலம் அடுத்த சில மணி நேரத்திற்குள் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
வாக்குச் சாவடிகளில் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் காத்திருக்கும்
நிலையில், வாக்குப்பதிவு மிகவும் மெதுவாக நடப்பதாகத் தகவல்கள் வருகின்றன. இத்தகைய தாமதங்கள்
வாக்காளர்களைச் சோர்வடையச் செய்து, வாக்கு சதவீதத்தைக் குறைக்கக்கூடும். எனவே, ஒவ்வொரு
வாக்குச் சாவடியையும் முறையாகக் கண்காணித்து, வாக்குப்பதிவு எந்தத் தடையுமின்றி விரைவாக
நடப்பதை உறுதி செய்யப் பிரத்யேகக் கண்காணிப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
போக்குவரத்துத் தடைகள் மற்றும் நீண்ட வரிசை காரணமாக வாக்காளர்கள்
தாமதமாக வருவதைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட தொகுதிகளில் வாக்குப்பதிவு நேரத்தை
இரவு 8:00 மணி வரை நீட்டிக்க வேண்டும். முன்னதாக இது போன்ற அசாதாரண சூழல்களில் இத்தகைய
முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. நியமிக்கப்பட்ட நேரத்திற்குள் வாக்குச் சாவடிக்கு வரும்
ஒவ்வொரு வாக்காளரும் தனது வாக்கைப் பதிவு செய்வதை உறுதி செய்வது அவசியம்.
வாக்குரிமை
என்பது இந்திய ஜனநாயகத்தின் முதுகெலும்பு. பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் அரசியலமைப்பு
உரிமையை இழக்கும்போது, தேர்தல் ஆணையம் மௌன சாட்சியாக இருக்கக்கூடாது. உடனடி நடவடிக்கை
எடுக்கப்படாவிட்டால், அது தேர்தல் நடைமுறையின் மீதான மக்களின் நம்பிக்கையையே சிதைத்துவிடும்”
என்று கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
விஜய் கடிதம் குறித்து ஆலோசிப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்களிக்கும் நேரம் அதிகரிக்கப்படுமா என்று பார்க்கலாம்.
