Share via:
ஒரே ஒரு இடம் என்று சொல்லப்பட்டதால் வேல்முருகனும் ஒரு இடத்தைக்
குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் கம்யூனிஸ்ட் கட்சிகளும் கடுமையான அதிருப்தியை
வெளிக்காட்டியுள்ளன. இன்று தேர்தல் அறிவிப்பு வரும் என்பதால், இன்றைக்குள் கூட்டணியை
ஸ்டாலின் முடிவு செய்வார் என்று சொல்லப்படுகிறது.
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் 3 கட்டமாகவும்
மார்க்சிஸ்ட் கட்சியுடன் 2 கட்டமாகவும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. கூடுதலான
தொகுதிகளை இரு கட்சிகளும் கேட்டு வரும் சூழலில், தேமுதிக உள்ளிட்ட புதிய கட்சிகளின்
வரவைக் காரணம் காட்டி, தொகுதிகளை குறைத்துக்கொள்ளுமாறு திமுக வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் செயலாளர் பெ.சண்முகம், ‘’இரட்டை இலக்கத்தில்
போட்டியிட வேண்டும் என்பதை மார்க்சிஸ்ட் கட்சி தெரிவித்திருக்கிறது. ஆனால், புதிய கட்சிகள்
கூட்டணியில் இணைந்திருப்பதால் நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு தொகுதிகளை தருவது சிரமம்
என திமுக சொல்கிறது. இதே சிரமத்துக்கு மத்தியில் தான் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல்
தொகுதிகள் வழங்கப்பட்டிருக்கிறது. தேமுதிக-வுக்கும் கூடுதலாக தொகுதிகள் வழங்கப்படும்
என செய்திகள் வருகின்றன.
இவர்களுக்கு எல்லாம் கூடுதல் தொகுதிகள் கொடுக்க வாய்ப்பிருக்கும்
போது, இடதுசாரிகளுக்கு கூடுதல் தொகுதிகளை தர முடியாது என்று சொல்வது நியாயம் இல்லை.
கடந்த முறையை விட குறைத்து 5 தொகுதிகள் தான் வழங்கப்பட்டால், அப்போது கட்சியின் மாநிலக்
குழுவை கூட்டி, உரிய முடிவை எடுப்போம். மதவாத சக்திகளை எதிர்த்துப் போராடுவது எவ்வளவு
முக்கியமோ, அதே அளவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பலத்துக்கு ஏற்ப தொகுதிகளைப்
பெறுவதும் மிகவும் முக்கியம்” என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், “கடந்த
முறை 6 தொகுதிகளில் போட்டியிட்டிருக்கிறோம். இப்போது அதிகமான கட்சிகள் கூட்டணியில்
சேர்ந்திருப்பதால், நீங்கள் ஒன்றை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் முன்மொழிகிறார்கள்.
நாங்கள் ஏற்கெனவே இருந்த இடங்களுடன் கூடுதலாக தரவேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்தி
வருகிறோம். திமுக-வுக்கு சிரமம் இருப்பதை நாங்கள் உணர்கிறோம். ஆனால், நாங்கள் எங்களுக்குரிய
இடங்களைக் கேட்கிறோம். கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் இது குறித்து பேசி
முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.
இதேபோன்று வேல்முருகன் கட்சிக்கும் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்படுகிறது.
எனவே, அதை ஏற்பதா வேண்டாமா என்பதை முடிவு செய்ய ஆலோசனைக்கூட்டம் கூட்டியிருக்கிறார்.
தேர்தல் அறிவிப்பு வந்ததும் எல்லோரும் திமுகவின்
கீழ் வந்துவிடுவார்கள் என்று நம்புகிறார் ஸ்டாலின். பார்க்கலாம்.
