Share via:
அன்புமணியை அழைத்து ஒப்பந்தம் போட்ட விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி
மீது கடும் கோபத்தில் இருக்கிறார் ராமதாஸ். அதேநேரம் அதிமுக கூட்டணியில் அன்புமணிக்குப்
பதில் தனக்கு முக்கியத்துவம் கிடைத்தால் மட்டும் சேர்வதாக தகவல் கூறியிருந்தார். ஆனால்,
இதற்கு எடப்பாடி எந்த ஒப்புதலும் கொடுக்கவில்லை.
இந்நிலையில் திமுக கூட்டணியில் இருந்து அழைப்பு கொடுக்கப்பட்டது.
மாம்பழம் சின்னத்துடன் வந்தால் மட்டுமே கூட்டணியில் சேர்ப்பது குறித்தும் தொகுதி பங்கீடு
குறித்தும் பேசலாம். அப்படியில்லை என்றால் தனித்து நிற்பதற்கு உதவி செய்யப்படும் என்று
கூறப்பட்டது.
என்வே இப்போது வேட்பு மனுக்களை தாக்கல் செய்த சென்னை, வேலூர்,
திருவண்ணாமலை உட்பட 13 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் நிறுவனர் ராமதாஸ், கவுரவத் தலைவர்
ஜி.கே.மணி, செயல் தலைவர் காந்தி ஆகியோர் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நேற்று நேர்காணல்
நடத்தினார்கள்.
இந்நிலையில் பாமகவுக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்து, அன்புமணிக்கு
தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியதை எதிர்த்து அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தாக்கல்
செய்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில், நாளை விசாரணைக்கு வர உள்ளது.
கடந்த 2025 மே மாதமே பதவிக்காலம் முடிந்த நிலையில், கட்சியின்
தலைவராக நீடிப்பதாக போலி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதாக அன்புமணி மீது குற்றம் சாட்டியுள்ளார்
டாக்டர் ராமதாஸ். கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம்
அனுப்பியிருக்க கூடாது என்றும், சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக தனக்கே கடிதம் அனுப்பியிருக்க
வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம், மாம்பழ சின்னத்தை
யாருக்கும் ஒதுக்காமல் முடக்கும் என உத்தரவாதம் அளித்திருந்தது. ஆனால், இதுநாள் வரை
சின்னத்தை முடக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி
எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில், பிப்ரவரி 2-ம் தேதி
விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, சாதகமாக
இருக்கும்பட்சத்தில் உடனடியாக தன்னுடைய கூட்டணி முடிவு அறிவிப்பார் என்று சொல்லப்படுகிறது.
குறைவான இடம் என்றாலும் திமுக கூட்டணியில் இருப்பது வெற்றிக்கு நல்லது என்றே நினைக்கிறாராம்.
தவெக குறித்து அருள் பேசியதை ராமதாஸ் ரசிக்கவில்லை என்பதால் திமுகவுக்கே வாய்ப்பு அதிகம்
என்கிறார்கள்.
