Share via:
விஜய்யை திட்டுவதாக நினைத்து அண்ணா, எம்.ஜி.ஆரை சனியன் என்ற ரீதியில்
சீமான் பேசிய விவகாரத்துக்கு அத்தனை கட்சிகளும் விரட்டி விரட்டி திட்டுகிறார்கள்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் சென்னையில் நேற்று
செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 2026 தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக விஜய்
கூறியிருக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேட்டுள்ளனர். இதற்கு பதிலளித்து சீமான்,
‘’அவர் மாற்றம்னு சொல்லவே இல்லையே. அவருக்கு பதிலா நீங்க ஏன் பேசறீங்க? மாற்றம்னா எதுல
மாற்றம்னு சொல்லவே இல்லையே. அவரு என்ன செஞ்சிருக்காரு பாருங்க… திமுகல
2 இடலி எடுத்திருக்கார்…
அதிமுகல 2 தோசையை எடுத்திருக்கார். ரெண்டையும் பிச்சுப் போட்டு ஒரு உப்புமா கிண்டியிருக்கார்.
இங்க அண்ணாவை வச்சுக்கிடாப்பல… அங்க எம்ஜிஆரை வச்சுக்கிட்டாப்பல. இதுல என்ன
மாற்றம் வருது? இது ஒரு சனியன், அது ஒரு சனியன் ரெண்டு சனியனையும் சேர்த்து ஒரு சட்டையை
தைச்சுட்டார். சனிக்கிழமை…
சனிக்கிழமை கிளம்பிட்டார். இதுல மாற்றம்கிற சொல்லையே விஜய் சொல்லலையே. எதிலிருந்து
மாற்றம்? எப்படிப்பட்ட மாற்றம், எந்தெந்த இடத்தில் நிர்வாகத்தில் மாற்றம்? கல்வி, மருத்துவத்தை
இப்படி மாற்றுவேன் என்று விஜய் சொல்லவே இல்லையே…’’ என்று கிண்டலடித்திருந்தார்.
இந்த விவகாரத்தை அதிமுகவும் திமுகவும் கண்டித்தன என்றாலும் விஜய்
கட்சியினர் தொடர்ந்து கடுமையாக கண்டனம் தெரிவிக்கிறார்கள்.
தவெகவினர், ‘பள்ளி மாணவர்களுக்கான சத்துணவுத் திட்டம் தொடங்கி
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நியாயவிலைக் கடைகள், கிராம நிர்வாக அலுவலர் நியமனங்கள் போன்ற
மக்களுக்கான மகத்துவத் திட்டங்கள் வரை வகுத்து பொற்கால ஆட்சியை நடத்தினார் புரட்சித்
தலைவர் எம்ஜிஆர் அவர்கள்.
தமிழ் இலக்கியத்தின் அறத்தையும், தமிழ் மொழியின் உலகளாவிய குணத்தையும்
பேரறிஞர் அண்ணா பறைசாற்றினார் என்றால், தாய்த்தமிழ் உறவுகள் மட்டுமின்றி தொப்புள்கொடி
ஈழத் தமிழ் உறவுகளையும் அரவணைத்தார் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். தமிழ்நாட்டின் இத்தகைய
பேராளுமை தலைவர்களை இழிவுபடுத்தும் விதமாகப் பேசுபவர்கள் சட்டமன்றத்தில் அல்ல, பட்டிமன்றத்தில்
கூட வெல்ல முடியாது. தொடர்ச்சியாகத் தரம் தாழ்ந்து பேசும் போலி போராளிகள் காலத்தில்
கரைந்து போவார்கள். பேரறிஞர் அண்ணா மற்றும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆகியோரை அவமதிக்க
யாருக்கும் அருகதை இல்லை’’ என்று விமர்சனம் செய்கிறார்கள்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியினர், ‘’அண்ணன் சீமான் MGR ,
அண்ணாதுரை இருவரையும் சனியன்கள் என்று விமர்சித்துள்ளார் என்பது தவறான தகவல்… நிருபரிடம்,
விஜய்யே தன்னை மாற்று என்று சொல்லவில்லையே நீங்கள் ஏன் அப்படி சொல்கிறீர்கள்… அவர்
அதிமுக , திமுக இரண்டு கட்சிகளிடம் கொள்கையை எடுத்துள்ளார். இதில் எங்கே மாற்று அரசியல்
உள்ளது எங்கே மாற்று கொள்கை உள்ளது இரண்டும் கட்சிகளும் சனியன்கள் என்றே சொல்லியிருப்பார்”
இந்த காணொளி பாதியாக வெட்டப்பட்டுள்ளது… முழுக்காணொளி பார்த்தால் நிருபர் கேட்ட கேள்விக்கு
கொள்கையை முதன்மைப்படுத்தியே அண்ணன் சீமான் பதிலளித்திடுப்பார்… அண்ணாதுரை , MGR
சனியன்கள் என்று எங்கேயும் குறிப்பிடவில்லை…’’ என்று விளக்கம் தருகிறார்கள்.