Share via:
சீனியர் மக்களுக்கு ரயிலில் இருந்த கட்டண சலுகை முற்றிலும் மறுக்கப்பட்டது.
மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்தபிறகும் மோடி அரசு மக்கள் மீது கொஞ்சமும் கருணை காட்டவில்லை.
இந்த நிலையில் ரயில் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே அமைச்சகம் அறிவிப்பின்படி, திருத்தியமைக்கப்பட்ட புதிய
ரயில் கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. அந்த வகையில், புறநகர் ரயில் பயணக்
கட்டணங்கள் மற்றும் சீசன் டிக்கெட் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
புறநகர் அல்லாத பிற ரயில்களில் சாதாரண, ஏசி அல்லாத இரண்டாம் வகுப்பில் பயணம் செய்வதாக
இருந்தால் முதல் 500 கிலோ மீட்டர் தூர பயணத்திற்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை. 500
கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் பயணம் செய்வதாக இருந்தால் ஒரு கிலோ மீட்டருக்கு அரை
பைசா வீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, 501 முதல் ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஐந்து
ரூபாயும், ஆயிரத்து 501 முதல் 2 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு 10 ரூபாயும்,
2 ஆயிரத்து 501 முதல் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு 15 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த ரயில்களில் படுக்கை வசதி வகுப்பு மற்றும் முதல் வகுப்பில் பயணம் செய்வதாக இருந்தால்
ஒரு கிலோ மீட்டருக்கு அரை பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து டாக்டர் அன்புமணி ராமதாஸ், ‘’தமிழ்நாட்டிற்குள் அதிகபட்ச
பயணதூரமான சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு சாதாரண தொடர்வண்டிகளில் பயணம் செய்ய
5 ரூபாயும், விரைவு வண்டிகளின் சாதாரண வகுப்புகளில் பயணிக்க 8 ரூபாயும், குளிரூட்டி
வசதி கொண்ட பெட்டிகளில் பயணிக்க 15 ரூபாயும் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
ஒப்பீட்டளவில் இந்தக் கட்டண உயர்வு பெரிதல்ல. ஆனாலும் இந்த சுமை கூட மக்கள் மீது சுமத்தப்படக்
கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும்.
மேலும் இந்தக் கட்டண உயர்வின் மூலம் தொடர்வண்டித்துறைக்கு கிடைக்கும்
கூடுதல் வருமானமான ரூ.1,100 கோடி என்பது, நடப்பாண்டில் பயணியர் போக்குவரத்தின் மூலம்
கிடைக்கும் மொத்த வருமானமான ரூ. 92,800 கோடியில் 1.18% மட்டும் தான். இதை வேறு ஆதாரங்களின்
மூலம் மக்களுக்கு பாதிப்பில்லாமல் திரட்ட முடியும். எனவே, தொடர்வண்டிக் கட்டண உயர்வை
ரயில்வே வாரியம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.