Share via:
ராஜீவ்காந்தி மரணத்துக்குப் பிறகு இந்தியாவில் எல்.டி.டி.இ. இயக்கம்
தடை செய்யப்பட்டது. அதேநேரம், எல்.டி.டி.இ. இயக்கத் தலைவர் பிரபாகரன் படத்தை பொதுவெளியில்
பயன்படுத்துவதற்கும் தடை இருக்கிறது. ஆனால், சீமானின் நாம் தமிழர் இயக்கத்தினர் தொடர்ந்து
எல்லா மேடைகளிலும் பிரபாகரன் படத்தை பயன்படுத்தி வந்தனர். மத்திய பா.ஜ.க. ஆதரவு இருப்பதாலே
இதை யாரும் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட எல்.டி.டி.இ தலைவர் பிரபாகரனின் படத்தை பொது வெளியில் பயன்படுத்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது அந்த கட்சியினரை
அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எல்.கே சார்லஸ் அலெக்சாண்டர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ’’எஸ்.பி ஆதித்தனார் அவர்களால் நாம் தமிழர் கட்சி கடந்த 1958ம் ஆண்டு துவங்கப்பட்டது. அவரது மறைவுக்கு பின், இயக்குநர் சீமான் 2010ம் ஆண்டு முதல் தலைமை ஒருங்கிணைப்பாளராக கட்சியை நிர்வகித்து வருகிறார். இந்நிலையில், எல்.டி.டி.இ மற்றும் இலங்கை அரசுக்கும் இடையே 2009ம் ஆண்டு போர் நடைபெற்ற போது, எல்.டி.டி.இ அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சீமான் போர் முனையில் நேரில் சந்தித்ததாகவும், அந்த சந்திப்புக்கு பின் ஏ.கே 47 ரக துப்பாக்கியில் போர் பயிற்சி எடுத்ததாகவும் தமிழகத்தில் பரப்புரை செய்து வருகிறார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, பிரச்சாரத்திற்கு தமிழகம் வந்தபோது குண்டு வெடிப்பில் உயிரிழந்தார். இதையடுத்து எல்.டி.டி.இ அமைப்புக்கு இந்தியாவில் தடை விதித்ததுடன், கடுமையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்தது. ஒன்றிய அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இலங்கை போர் தொடர்பாக வன்முறையை தூண்டும் வகையிலும், “மார்பிங்” செய்யப்பட்ட புகைப்படங்களையும் சீமான் பயன்படுத்தி வருகிறார்
கள்ளக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை நாங்கள் தான் கொலை செய்தோம் என சீமான் பகிரங்கமாக பேசியுள்ளார். அதனால், தடை செய்யப்பட்ட எல்.டி.டி.இ அமைப்பின் தலைவர் பிரபாகரன் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய – மாநில அரசுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், பிரபாகரனின் படத்தை பொது வெளியில் பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபாகரன் படத்துக்குத் தடை விதிக்கப்பட்டால் சீமான் கட்சிக்கு
பெருத்த சேதாரம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.