Share via:

அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வாஷிங்டனில் நடந்த பதவியேற்பு விழாவில்
அமெரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட் பதவி டொனால்டு டிரம்புக்கு பதவி
பிரமாணம் செய்து வைத்தார். அப்போது தனது குடும்ப பைபிள் மற்றும் ஆபிரகாம் லிங்கனின்
பைபிளை பயன்படுத்தி அதிபராக பதவி ஏற்று கொண்டார் டிரம்ப்.
பதவியேற்றதும் டிரம்ப் பேசுகையில், ‘’அமெரிக்காவின் பொற்காலம்
இப்போதே தொடங்குகிறது என்று கூறிய டிரம்ப், இந்த நாளில் இருந்து நமது நாடு மீண்டும்
செழிக்கும் உலகம் முழுவதும் மதிக்கப்படும். அமெரிக்காவை முதன்மைப்படுத்துவதே தனது நோக்கம்
என்றும் நாட்டின் இறையாண்மை பாதுகாப்பு மீட்டெடுக்கப்படும்’’ என்று கூறினார்.
முந்தைய நிர்வாகத்தின் கிட்டத்தட்ட 80 அழிவுகரமான மற்றும் தீவிரமான
நிர்வாக நடவடிக்கைகளை திரும்பப் பெறுவதற்கு நாங்கள் முதலில் நிர்வாக உத்தரவுகளில் கையொப்பமிடுவோம்
என்று தேர்தல் பிரசாரத்தில் கூறியிருந்தபடி ஜோ பைடன் நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை
மாற்றியமைக்க 80 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.
அதோடு, ’’தெற்கு அமெரிக்க எல்லையில் எமர்ஜென்சி அறிவிக்கப்படுகிறது.
எல்லா சட்டவிரோத நுழைவுகளும் உடனடியாக நிறுத்தப்படும். மில்லியன் கணக்கான கிரிமினல்
வெளிநாட்டினரை அவர்கள் வந்த இடங்களுக்கு திருப்பி அனுப்பும் செயல்முறையை தொடங்குவோம்.குடியேற்றத்தைத்
தடுப்பது, புதைபடிவ எரிபொருள் உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் சுற்றுச்சூழல் விதிமுறைகளை
திரும்பப் பெறுவது, 2021 பாரிஸ் காலநிலை ஒப்பந்தம், உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து
வெளியேற்றம் ஆகியவை முதல் நாள் உத்தரவுகளில் அடங்கும். மற்ற நாடுகளில் போர்களில் அமெரிக்கா
பங்கேற்காது. அமெரிக்க பாதுகாப்பு மட்டுமே முக்கியம்’’ என்றும் அறிவித்தார்.
டொனால்டு டிரம்ப் கையொப்பமிட்ட முதல் நிர்வாக உத்தரவுப்படி, அரசாங்கத்தின்
நிர்வாகக் கிளையில் உள்ள அனைத்து துறைகள் மற்றும் ஏஜென்சிகளின் தலைவர்கள், தொலைதூர
பணி ஏற்பாடுகளை நிறுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைவில் எடுக்க வேண்டும்
என்றும் உத்தரவிட்டார். அதிபர் கையெழுத்திட்டதுமே பணியாளர்கள் முழு நேர அடிப்படையில்
அந்தந்த பணிநிலையங்களில் நேரில் பணிக்குத் திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் பேச்சு சுதந்திரத்தை மீட்டெடுப்பது மற்றும் கூட்டாட்சி
தணிக்கையை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பான கோப்பிலும் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.
ஆண் மற்றும் பெண் என்ற இரு பாலினங்களுக்கு மட்டுமே அமெரிக்காவில் அங்கீகாரம் அளித்துள்ள
அதிபர் டொனால்டு டிரம்ப், மற்ற பாலினங்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்திருப்பது
பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவின் அதிரடிக் கூத்துக்களை அத்தனை நாடுகளும் அதிர்ச்சியுடன்
பார்த்துவருகின்றன.