Share via:
இன்றைய அரசியல்வாதிகளில் எக்குத்தப்பாகப் பேசுவதில் சீமானைப் போன்றவர்
பிரேமலதா. வாய்க்கு வந்ததை எல்லாம் கருத்தாகப் பேசுபவர். தேசியகீதத்திற்காக கவர்னரின்
வெளிநடப்பு விவகாரத்தில் அவர் பேசியிருக்கும் கருத்து செம வைரலாகி வருகிறது.
பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழக
மாணவிக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்பதற்காக அனுமதி மீறி தே.மு.தி.க.வினர் நேற்று
போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, ‘’கவர்னர்
என்ன வருசத்துக்கு ஒரு முறை சட்டமன்றம் வர்றாரு. தேசிய கீதம் பாடச் சொன்னா பாட வேண்டியது
தான… தேசிய கீதத்தை இரண்டு முறை பாடுவதில் என்ன தவறு? தமிழ்த்தாய் வாழ்த்து பாடுறது
மரபா இருந்தாலும் தேசிய கீதம் பாடச் சொன்னா பாட வேண்டியது தானே..?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அதோடு, ‘’மாணவிகளின் கருப்பு துப்பட்டாவை அகற்றச் சொல்லும் தி.மு.க.
அரசு, தங்கள் கட்சிக் கொடியில் உள்ள கருப்பு நிறத்தை அகற்ற தயாரா?’’ என்றும் ஒரு கேள்வி
எழுப்பியிருக்கிறார்.
இதற்கு பதிலளிக்கும் தி.மு.க.வினர், ‘’அது என்ன தேசிய கீதமா அல்லது
பஜனைப் பாடலா இஷ்டப்பட்ட நேரத்தில் எல்லாம் பாடுவதற்கு… சட்டம், நியாயம், மரபு போன்ற
எதுவும் தெரியாமல் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசும் பொம்பள சீமானே வாயை அடக்கு’’ என்று
பிரேமலதாவின் கருத்துக்கு கடுமையான விமர்சனம் செய்துவருகிறார்கள்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்திலும் விஜயபிரபாகரன் தோல்வி
அடைந்தபோது, “ஒரு சின்ன பையனை, பெரிய மனசு பண்ணி ஜெயிக்க வச்சிருந்தாங்கன்னா, இந்த
ஆட்சியை தலைவணங்கி வரவேற்றிருப்பேன்” என்று எடக்குமடக்காகப் பேசியவர் தான் பிரேமலதா.
அதேபோன்று, ‘’வரும் 2026 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருப்போம்’’
என்று மீண்டும் மீண்டும் கூறிவருகிறார். அதேநேரம் பா.ஜ.க. தலைவர்களுடனும் ஓ.பி.எஸ்.
ஆட்களுடனும் நெருக்கமாகப் பழகிவருகிறார். கடந்த தேர்தலில் வேறு வாய்ப்புகளே இல்லை என்பதாலே
எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணிக்கு வந்தார் பிரேமலதா. அப்போது மிகக் குறைவான தொகுதிகளே
ஒதுக்கப்பட்டன. அதற்கு முந்தைய சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க.வை எடப்பாடி பழனிசாமி
சேர்க்கவே இல்லை.
அதேபோல் வரும் தேர்தலிலும் பா.ம.க. வருகைக்காகவே காத்திருக்கிறார்
எடப்பாடி பழனிசாமி. ராமதாஸ் வந்துவிட்டால் பிரேமலதாவுக்கு கெட் அவுட் சொல்லிவிடுவார்
என்பது தான் நிதர்சனம். ஆனாலும், தன்னை அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாகவே
நினைத்து செயல்படுகிறார் பிரேமலதா. அது உண்மையா என்பதை 2026ல் தெரிந்துவிடும்.