Share via:
இன்று தி.மு.க. மாவட்டக்
கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் வழக்கம் போல் சில தீர்மானங்களை நிறைவேற்றிய பிறகு முதல்வர்
ஸ்டாலின் சீரியஸாக பேசியிருக்கிறார். அமெரிக்கா செல்வதைக் குறிப்பிட்டு யாரும் முறைகேட்டில்
ஈடுபடக் கூடாது என்று அமைச்சர்களுக்கு மிரட்டல் விடுத்திருக்கிறார்.
அவர் பேசுகையில்,
’’2019-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நாற்பதுக்கு 39 பெற்றோம். 2024 தேர்தலில் நாற்பதுக்கு
நாற்பது பெற்றோம். இரண்டு தேர்தலில் முழுமையான வெற்றியை இதுவரை யாரும் பெற்றது இல்லை;
நாமும் இதுக்கு முன்பு பெற்றது இல்லை. இந்த தேர்தல் வெற்றியை ஆவணப்படுத்தி, ‘தென் திசையின்
தீர்ப்பு’ என்ற நூலை உருவாக்கி வழங்கியிருக்கிறேன்.
2019 நாடாளுமன்றத்
தேர்தல் தொடங்கி, நடந்த முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரை தொடர்ச்சியாக மக்கள்
மன்றத்தில் வென்றிருக்கிறோம். சுணக்கமில்லாமல் செயல்பட்டால், அடுத்த முறையும் நம்முடைய
கழக ஆட்சி என்பதால் சந்தேகமில்லை. அதற்கு தயாராகும் வகையில், நாம் களப்பணிகளை தொடங்க
வேண்டும். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தேர்தலை மனதில் வைத்தே செயல்பட வேண்டும். விமர்சனங்களுக்கு
பதில் சொல்லும் அதேவேளையில் நம்முடைய சாதனைகளையும் மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்க
வேண்டும்.
2026 சட்டமன்றத்
தேர்தலில் நம்முடைய இலக்கு 200 தொகுதிகள் என்று நான் சும்மா ஏதோ மேடைப் பேச்சுக்காக
குறிப்பிடவில்லை. அந்த அளவுக்கு நலத்திட்டப் பணிகளை செய்திருக்கிறோம். மக்களிடம் நற்பெயரை
வாங்கியிருக்கிறோம். தமிழ்நாட்டின் எந்த ஒரு வீட்டை எடுத்துக் கொண்டாலும் அந்த வீட்டில்
ஒருவராவது பயனடையும் வகையில்தான் திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மக்களை சென்று சேர்ந்திருக்கும் நலத்திட்டங்கள் எல்லாம் வாக்குகளாக மாற வேண்டும் என்றால்
அதற்கு நம்முடைய களப்பணி மிக மிக அவசியம். அதற்கு இப்போதே நாம் உழைக்க வேண்டும்.
நான் முதலீடுகளை
ஈர்ப்பதற்காக வரும் 27-ஆம் தேதி இரவு அமெரிக்காவிற்குப் புறப்பட இருக்கிறேன். தீர்மானத்தில்
சொன்னபடி, முப்பெரும் விழாவிற்கான பணிகளை செய்து முடிப்பதோடு – நான் இப்போது சொல்லியிருக்கும்
பணிகளையும் செய்ய தொடங்கியிருக்க வேண்டும். நான் அமெரிக்காவில் இருந்தாலும் தலைமைக்
கழகம் மூலமாக இதையெல்லாம் கவனித்துக் கொண்டுதான் இருப்பேன்.
இந்தியாவிலேயே முதன்முதலாக
ஒரு மாநிலக் கட்சி ஆட்சியை பிடித்த வரலாறு தமிழ்நாட்டுக்குத்தான் சொந்தம்! அந்த வரலாற்றை
எழுதியது நாம்தான்! கட்சி தொடங்கி 75 ஆண்டுகள் ஆனபிறகும் ஆட்சியில் இருக்கும் இயக்கமும்
நம்முடையதுதான். அப்படிப்பட்ட தருணத்தில் – கோடிக்கணக்கான தொண்டர்கள் இருக்கும் இந்த
இயக்கத்தில், நானும் நீங்களும் பல்வேறு கட்சிப் பொறுப்புகளில் இருக்கிறோம் என்பது நமக்கெல்லாம்
கிடைத்த மிகப்பெரிய பெருமை’’ என்று கூறியிருக்கிறார்.