Share via:
சமீபத்தில் தமிழக
கவர்னர் ஆர்.என்.ரவி, மாநில பாடத்திட்டம் தரமாக இல்லை என்று ஒரு விமர்சனம் முன்வைத்தார்.
இதற்கு உடனடியாக மதுரை கம்யூனிஸ்ட் எம்.பி.யான சு.வெங்கடேசன், ‘’மாநில பாடத்திட்டம்
தரம் தாழ்ந்து இருப்பதாக ஆளுநர் ஆர். என். இரவி கூறியுள்ளார். புல் புல் பறவை சாவர்க்கரை
காப்பாற்றிய கதையோ, முதலைகளிடமிருந்து மோடி தப்பித்த கதையோ தமிழ்நாட்டு பாடங்களில்
இல்லை. தனக்கு பிடித்த காட்சி இல்லாத ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் உரிமை ஆளுநருக்கும்
உண்டு… என்று கிண்டல் செய்திருந்தார்.
மேலும் தி.மு.க.
கூட்டணிக் கட்சியினர் அத்தனை பேரும் கடுமையாக விமர்சனம் வைத்திருந்தார்கள். அண்ணாமலை
இருந்திருந்தால் உடனே கவர்னரை காப்பாற்றும் வகையில் பதிலடி கொடுத்திருப்பார். இதனை
ஹெச்.ராஜா பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை என்பதால் வானதி சீனிவாசன் களம் இறங்கியிருக்கிறார்.
குறிப்பாக வெங்கடேசனுக்குப்
பதில் கூறியிருக்கும் வானதி சீனிவாசன், ‘’மாணவர்கள் தங்கள் மாநில பாடத்திட்டத்தையும்
தாண்டி சிந்திக்க வேண்டும், நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ரோபோட்டிக்ஸ்,
AI தொழில்நுட்பங்கள் மற்றும் நானோ தொழில்நுட்பம் ஆகியவற்றை கற்க வேண்டும்” என்று தமிழக
ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதை திரித்துப் பேசி அரசியாலக்க முயற்சித்திருக்கிறார் சு.வெங்கடேசன்.
மாநில பாடத்திட்டத்தில்
உள்ள சில குறைபாடுகளின் காரணமாகவே, இன்று தமிழகத்தில் நிறைய தனியார் பள்ளிகளும்,
CBSE பாடத்திட்டத்தை நோக்கி நகரும் பெற்றோர்களும் அதிகரித்துள்ளனர் என்பது பலகாலமாக
நமது தமிழ்ச் சமூகத்தில் ஒலித்துவரும் கவனிக்கத்தக்க விமர்சனமாகும். ஆனால், தமிழகத்தின்
நலன்சார்ந்து முன்வைக்கப்படும் விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு அதை சீர்தூக்கிப் பார்த்து
சரி செய்து கொள்ளும் பக்குவம் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு இல்லை.
மாநிலப் பாடத்திட்டத்தின்
புகழ்கவி பாடும் உங்களுக்கு, தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் தமிழில் எழுதப்படிக்க கூட
தடுமாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்ற தகவல் தெரியுமா? தமிழகத்தில் ஆசிரியர்களின்றி பல அரசுப்பள்ளிகள்
இயங்கும் நிலையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்படுகிறது என்பதை
எவ்வாறு உறுதி செய்யமுடியும்?
உங்கள் கூட்டணிக்
கட்சியான திமுக, “மாநிலக் கல்விக் கொள்கை” கொண்டுவரப்படும் என்று கூறி, 3 ஆண்டுகள்
கடந்த நிலையிலும் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதே, இதுவரை அதைப்பற்றி எதாவது
கேள்வி எழுப்பியுள்ளீர்களா? உங்களுக்குப் பிடித்தமான கட்சி ஆட்சியில் இருப்பதால், அரசுப்பள்ளி
மாணவர்களை வஞ்சிக்கும் இந்த அநீதி அரசைக் கண்டும் காணாமல் கடந்து செல்கிறீர்களோ?
ஈவேரா பெரியாருக்கு
போலி யுனெஸ்கோ விருது கொடுத்தும், கட்டணம் செலுத்தி பெறப்பட்ட அஞ்சல் தலையை ஆஸ்திரிய
நாடு தானே முன்வந்து கருணாநிதி அவர்களுக்கு கொடுத்த மரியாதை என்றும் போலி விளம்பரம்
செய்த திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு, வீர சாவர்க்கர் குறித்தும், பாரதப்பிரதமர்
குறித்தும் பேச எந்த தகுதியும் இல்லை’’ என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.
எதையாவது பேசிவிட்டுப்
போய்விடும் கவர்னரை காப்பாற்ற என்னவெல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டியிருக்கிறது.