Share via:
சென்னையில் மழை நின்று போனாலும் வெள்ளம் வடிவதாக இல்லை. அரசு இயந்திரம்
இரவு பகலாக வேலை செய்தாலும் உடனடி தீர்வு எட்டப்படவில்லை. இந்த நிலையில் சென்னையில்
கட்டுமானத்தை உடனடியாக தடுத்து நிறுத்துவதே தீர்வு என்று சுற்றுச்சூழல் எச்சரிக்கை
செய்கிறார் சமீபத்தில் பதவி பறிக்கப்பட்ட மாஜி அமைச்சர் மனோ தங்கராஜ்.
அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட பிறகும் தினமும் அறிக்கை போர் நடத்திவருகிறார்.
ஸ்டாலினுடன் நேரடியாக மோதவில்லை என்றாலும் சிக்கலான விஷயங்களை நுட்பமாக சுட்டிக் காட்டுகிறார்.
இந்த நிலையில் இன்றைய அவரது எச்சரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
சென்னை வெள்ளம் குறித்து மனோ தங்கராஜ், ‘’இன்றைய தேதியில் சென்னையில்
பிறக்கும் குழந்தை 2040-ல் 36 வயதை எட்டி விடும். அன்று சென்னையின் 10% நிலம் கடல்நீரால்
அழிந்து போகும் என்கிறது ஆய்வறிக்கை. 2100-ம் ஆண்டில், அதாவது அக்குழந்தையின் 76-வது
வயதில் சென்னையின் 207 சதுர கிலோ மீட்டர் நிலம் கடல் நீரில் மூழ்கிவிடும் என்கிறது
சிஎஸ்டிஇபி ஆய்வறிக்கை.
மனிதன் இயற்கையின் சுழற்சியை தடுத்த நிறுத்துவது சாத்தியமல்ல.
ஆனால் பேரழிவைத் தவிர்க்கக்கூடிய சில அம்சங்கள் மனிதனுக்கு முன் இருக்கின்றன. குறிப்பாக
அதிதீவிர நகரமயமாக்கல், தேவைக்கு மிகையான ஆடம்பர கட்டுமானங்கள், இயற்கையை பாதிக்கும்
செயற்கைகள், தேவையற்ற நுகர்வு கலாச்சாரம், பிளாஸ்டிக் மாசுபாடு, இயற்கை வளங்கள் சுரண்டல்,
நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு போன்றவற்றை நமக்கு நாமே கட்டுப்படுத்துவது எதிர்கால தலைமுறைக்கு
நாம் ஆற்றும் சேவை.
பெருமழை, வெப்ப அலை, பெரும் புயல் போன்ற இயற்கையின் ஒவ்வொரு சமிக்ஞைகளும்
மனித இனத்திற்கு வழங்கப்படும் எச்சரிக்கை ஒலி. சென்னை நகரை பொறுத்தவரை கட்டுமானங்கள்
நிரந்தரமாக தடை செய்ய வேண்டிய காலகட்டத்தை கடந்து பயணிக்கிறோம். இது போன்ற நகரங்களில்
மக்கள் தொகை குவிவது சிக்கலானது. வளர்ச்சி பரவலாக்கப்பட வேண்டும், இயற்கையுடன் இசைந்திருக்க
வேண்டும், சக உயிரினங்களை பாதுகாப்பதாக இருக்க வேண்டும், அது போன்று ஐ.நா. வகுத்துள்ள
நீடித்த நிலையான வளர்ச்சி கூறுகளை ஒவ்வொரு திட்டமிடுதலிலும் கணக்கில் கொள்ள வேண்டும்
என்பதை இச்சூழல்கள் நமக்கு நன்கு உணர்த்துகின்றன..’’ என்று கூறியிருக்கிறார்.
நியாயமான கருத்து என்றாலும் சாத்தியமில்லாத ஒன்று என்பதால் தி.மு.க.வினர்
தர்மசங்கடத்தில் நெளிகிறார்கள்.