Share via:
சிவகாசி அடுத்த காளையார் குறிச்சியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் இன்று (ஜூலை 9ம்தேதி) காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. முருகவேல் என்பவருக்கு சொந்தமான இந்த பட்டாசு ஆலை நாக்பூர் உரிமம் பெற்று சுப்ரீம் பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் செயல்பட்டு வந்தது.
4 அறைகள் கொண்ட இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை தொழிலாளர்கள் வழக்கமாக வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 4 தொழிலாளர்கள் பட்டாசு மருந்து கலந்து கொண்டிருந்தனர். கோப்பையில் நிரப்பப்பட்டு இருந்த ரசாயன மூலப்பொருட்களை கொண்டு சென்ற சிலர் அதனை கைநழுவி கீழே விட்டுள்ளனர். கீழே விழுந்த ரசாயன மருந்து விழுந்த வேகத்தில் வெடித்து சிதறியுள்ளது.
இந்த விபத்தில் அந்த அறை முழுவதும் தரைமட்டமான நிலையில், 65 வயதான சிம்பரத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதே போல் முத்து முருகன் என்ற தொழிலாளியும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் 55 வயதான சரோஜினி என்ற பெண்ணும், 54 வயதான சங்கரவேல் என்ற 2 தொழிலாளிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிவகாசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெடிவிபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற சிவகாசி தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். மேலும் எம்.புதுப்பட்டி காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட சார் ஆட்சியர் பிரியா ரவிச்சந்திரன் அங்கிருந்த தொழிலாளர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளிடம் விபத்து குறித்து கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து, விபத்திற்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.