Share via:
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.
சார்பில் வைகோவின் மகன் துரை வைகோ தீப்பெட்டி சின்னத்தில் நிற்கிறார். அவரை எதிர்த்து
அ.தி.மு.க.வில் – கருப்பையா பன்னீர்செல்வமும் பா.ஜ.க. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. – செந்தில்நாதனும் போட்டியிடுகிறார்கள்.
உதயசூரியன் சின்னத்தில் நின்றால் 100 சதவிகிதம் வெற்றி உறுதி என்று
நேரு அழுத்தி அழுத்தி சொன்ன பிறகும் பம்பரம் என்பதில் வைகோ உறுதியாக இருந்தார். ஆனால்,
தேர்தல் கமிஷன் பஞ்சாயத்தால் பம்பரம் கிடைக்காமல் இப்போது தீப்பெட்டி சின்னத்தில் நிற்கிறார்.
இந்த புதிய சின்னத்தைக் கொண்டுசேர்க்க சிரமம் இருப்பதாக திருச்சி தி.மு.க.வினரே தடுமாறுகிறார்கள்.
இதுகுறித்து பார்க்கும் முன்பு தொகுதி நிலவரம் பார்த்துவிடலாம்.
இந்த நாடாளுமன்ற தொகுதிக்குள் திருவரங்கம், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவெறும்பூர்
மற்றும் புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை எல்லாமே
தி.மு.க. கூட்டணியின் கையிலே உள்ளன.
திருச்சி ஏரியாவில்; முத்திரையர், வெள்ளாளர், முக்குலத்தோர், பட்டியல்
சமூகத்தினர், நாயுடு, இஸ்லாமியர்கள் நிரம்பியுள்ளனர். விவசாயம் மற்றும் சிறு குறு தொழில்கள்.
திருச்சி பெல் நிறுவனம் தொடர் சிக்கலில் இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியினர் தொகுதி பறிபோன அதிருப்தியில் இருக்கிறார்கள்.
திருநாவுக்கரசருக்கு இல்லையென்றால் வேறு யாருக்காவது தொகுதியை வாங்கியிருக்கலாம் என்ற
கோபம் காங்கிரஸ்காரர்களுக்கு இருக்கிறது. அடைக்கலராஜ் குடும்பத்தினர் தொகுதியை விரும்பினார்கள்.
திருநாவுக்கரசர் மீது மக்களுக்கு மதிப்பு குறைந்துபோனதை கணக்கிட்டே தொகுதி ம.தி.மு.க.வுக்கு
கொடுக்கப்பட்டுள்ளது என்று சமாதானம் பேசுகிறார்கள்.
துரை வைகோ மற்றும் கருப்பசாமி ஆகிய இருவருமே வேறு தொகுதியைச் சேர்ந்தவர்கள்
எனும்போது கருப்பையா மட்டும் பெரும்பான்மை சமூகத்தவர். ஆகவே, அந்த ஓட்டு விழும் என்ற
நம்பிக்கையில் இருக்கிறார்.
துரை வைகோவுக்கு இரண்டு பிரச்னைகள் உள்ளன. ஒன்று கணேசமூர்த்தியின்
மரணம் ம.தி.மு.க.வினரை அப்செட் ஆக்கியுள்ளது. வாரிசு அரசியலுக்கு எதிராக களம் இறங்கிய
ம.தி.மு.க.வில் வாரிசு அரசியலா என்று கடுப்பாகிறார்க்ள். அதேபோல், புதிய சின்னமும்
பிரச்னையாக இருக்கிறது.
மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த தொகுதியில் குறிப்பிட்ட வாக்குகள்
அ.தி.மு.க.வுக்கு வாங்கித் தருகிறேன் என்று எடப்பாடி பழனிசாமிக்கு உறுதி அளித்திருக்கிறாராம்.
வேட்பாளரை தேர்வு செய்ததும் அவர் தான். ஆகவே, பணம் விளையாடுவதற்கு வாய்ப்பு உண்டு.
இவர்களால் ஓரளவு வாக்கு பிரிக்க முடியுமே தவிர, பெருவெற்றி அடையும் டைப் வேட்பாளராக
இல்லை.
ஏரியாவில் பா.ஜ.க.வுக்கும் பா.ம.க.வுக்கும் செல்வாக்கு கிடையாது.
ஆகையால் அ.மமு.க.வினர் வாக்குகள் பிரிப்பது
தவிர வேறு எதுவும் செய்யப்போவதில்லை.
கடந்த 2019 தேர்தலில் திருநாவுக்கரசர் 6.21 லட்சம் வாக்குகள் பெற்றார்.
தே.மு.தி.க வேட்பாளர் இளங்கோவன் 1.62 லட்சம் வாக்குகள் மட்டுமே பெற்றார். அ.ம.முக.வின்
சாருபாலா தொண்டைமான் 1 லட்சம் வாக்குகளும் நாம் தமிழர் கட்சி 65 ஆயிரம் வாக்குகளும்
மக்கள் நீதி மய்யம் 42 ஆயிரம் வாக்குகளும் பெற்றன.
எத்தனை பிரச்னை இருந்தாலும் இங்கே துரைவைகோவை வெற்றி பெற வைக்க
வேண்டிய கடமை அமைச்சர் நேருக்கும் அன்பில் மகேஸ்க்கும் இருக்கிறது. ஆகவே, நிர்வாகிகளும்
பணமும் நிறையவே களம் இறங்கியிருக்கிறது. ஆகவே இந்த தேர்தலிலும் துரை வைகோ வெற்றி பிரகாசமாகவே
தெரிகிறது.
தீப்பெட்டி, கணேசமூர்த்தி போன்ற இடையூறுகளைத் தாண்டி பெரும்பான்மை
வாக்குகளுடன் வெல்கிறார் துரை வைகோ.