Share via:
பல்லடம், மதுரை, குலசேகரப்பட்டணம் என்று ஒரு ரவுண்ட் அடித்து திரும்பியிருக்கும்
மோடி கடும் அப்செட் என்று சொல்லப்பட்டது. ஏனென்றால் தொகுதி உடன்பாடு எட்டப்படாத காரணத்தால்
கூட்டணித் தலைவர்கள் யாரும் உடன் நிற்கவில்லை. இதனை சரிக்கட்டும் வகையில் மீண்டும்
சென்னைக்கு வருகிறார் பிரதமர் மோடி.
மார்ச் 4ம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பா.ஜ.க.
சார்பில் நடத்தப்பட இருக்கும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேச இருக்கிறார்.
இதற்கு பூமி பூஜை நேற்று போடப்பட்டது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில்
தாக்கல் செய்திருக்கும் மனுவில், வரும் மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு இரட்டை
இலை சின்னம் வழங்கக்கூடாது என தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளேன். உரிமையியல் நீதிமன்றத்தில்
நடக்கும் வழக்கின் முடிவு தெரியும் வரையில் இரட்டை இலையை யாருக்கும் ஒதுக்கக்கூடாது
என்று கோரியுள்ளார்.
இந்த வழக்கு எடப்பாடி பழனிசாமிக்கு வைக்கப்பட்டிருக்கும் செக்
என்றே கருதப்படுகிறது. பா.ஜ.க. கூட்டணிக்கு சம்மதிக்கவில்லை என்றால் இரட்டை இலை கிடைக்காது.
எனவே, புதிய சின்னத்தில் நிற்க வேண்டியிருக்கும் என்கிறார்கள்.
பன்னீர் இப்போது தாமரை சின்னத்தில் நிற்பதற்குத் தயாராகிவிட்டார், தினகரன் அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார் என்றாலும்
கூட்டணியில் உறுதியாக இருக்கிறார். ஆகவே, இப்போது எடப்பாடி என்ன செய்யப்போகிறார் என்பது
தான் கேள்வி.