Share via:
தமிழக பா.ஜ.க. துணைத்தலைவரான நாராயணன் திருப்பதி, நெல்லை மாவட்டத்தில்
நடைபெறும் அதிர்ச்சிகர சம்பவங்களை வெளிப்படுத்தி, தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதுகுறித்து அவர், ‘திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஜனவரி
2021 முதல், அக்டோபர் 2023 வரையிலான 34 மாதங்களில் 18 வயதுக்கும் குறைவான பெண்கள்
1448 குழந்தைகளை பெற்றுள்ளனர் என்ற அதிர்ச்சி செய்தி குலை நடுங்க செய்கிறது. இதில்
1101 பிரசவங்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற்றதாக சொல்லப்படுவது கொடூரமான
உண்மை.
347 குழந்தைகள் பிறந்தது திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்
என்பது அரசு நிர்வாகத்தின் அவலத்தை எடுத்துரைக்கிறது. மேலும், மேலப்பாளையம் நகர ஆரம்ப
சுகாதார நிலையின்கள் 88 பிரசவங்களையும், மானூர் ஊரக ஆரம்ப சுகாதார நிலையம் 44 பிரசவங்களையும்
கண்டிருப்பது தமிழக சுகாதார துறையின் நிர்வாகத்தை தோலுரித்து காண்பித்துள்ளது.
பள்ளிகளிலிருந்து இடைநிற்றல் காரணமாகவே குழந்தை திருமணம் நடைபெற்று
இந்த நிலை என்று சொல்லப்பட்டாலும், பல குழந்தைகள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி,
அதன் பின்னர் திருமணம் முடிப்பவர்களாக இருப்பது கொடுமையிலும் கொடுமை. திருமணத்திற்கு
முன்னரோ, பின்னரோ இந்த நடவடிக்கையானது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும்
சட்டம் 2012 (போக்சோ சட்டம்)ன் படி தண்டிக்கப்பட வேண்டிய மாபெரும் கடும் குற்றம் என்று
தொடர்புடையவர்கள் உணரவேண்டும்.
காவல்துறை, மாவட்ட நிர்வாகம், பள்ளி நிர்வாகம் என பல்வேறு துறையினர்
இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மையென்றாலும், தங்களின் குழந்தைகளை பாதுகாக்க,
உணர, கவனிக்க, அக்கறை கொள்ள தவறிய பெற்றோர்களே இந்த நிலைக்கு காரணம் என்று நான் கருதுகிறேன்.
அவசர உலகில் அவசரப்பட்டு நிலை தடுமாறாது குழந்தைகளை காக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் பெற்றோருக்கே
உள்ளது. இந்த விவகாரத்தில் சட்டமும், காவல்துறையும் குற்றம் நடந்த பிறகு தான் விவாகரத்தை
கையில் எடுக்க முடியும். ஆனால், இக் கொடூர குற்றத்தை தடுக்கும் முழு கடமையும், பொறுப்பும்
பெற்றோருக்கே உள்ளது. இது சமூக சீர்கேடு’ என்று குற்றச்சாட்டு எழுப்பியிருக்கிறார்.
இதற்கு தி.மு.க.வும் மாவட்ட நிர்வாகமும் இதுவரை பதில் அளிக்கவில்லை.