Share via:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற ஆவணித் தேரோட்டம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடாகும். இங்கு கடந்த 4ம் தேதி ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் சுவாமி& அம்பாள் பல்வேறு வாகனங்களிலும் அலங்காரத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
இந்நிலையில் திருவிழாவின் 10ம் நாளான இன்று (செப்.13) காலை 6 மணிக்கு ஆவணி தேரோட்டம் வெகு விமரிசையாக தொடங்கியது. முதலில் விநாயகர் எழுந்தருளிய தேரும், அதனைத் தொடர்ந்து சுவாமி குமரவிடங்க பெருமாள், வள்ளி& தெய்வானை அம்பாள் என 4 ரத வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதனை தொடர்ந்து வள்ளி அம்பாள் எழுந்தருளிய தேர் ரத வீதிகளில் பவனி வந்து இறுதியில் நிலையத்தை அடைந்தது.
ஆவணி தேரோட்டத்தில் திரளாக கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் எழுப்பிய அரோகரோ கோஷம் விண்ணைத்தாண்டி எதிரொலித்தது. தேரோட்டத்தை முன்னிட்டு போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

