Share via:
வரலாறு காணாத கனமழையால் திருநெல்வேலியில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் கொட்டித்தீர்த்த வரலாறு காணாத அதிகனமழை காரணமாக பெருவெள்ளம் சூழ்ந்தது. இதைத்தொடர்ந்து மீட்புக்குழுவினர் துரிதமாக செயல்பட்டு மக்களை மீட்டெடுத்தனர்.
இந்நிலையில் நெல்லை மாவட்ட நிர்வாகம், அம்மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏபட்டுள்ள மொத்த சேதம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், நெல்லை கனமழையில் 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,064 பேர் வீடுகளை இழந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் 67 மாடுகள், 504 ஆடுகள், 135 கன்றுகள், 28,382 கோழிகள் உள்ளிட்டவை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து நெல்லையில் மழை வெள்ள பாதிப்பு நிவாரணமாக 2 கோடியே 87 லட்சம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக அரசு சார்பில் நெல்லை மாவட்டத்திற்கு முதல்கட்டமாக 58 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது என்றும் நெல்லை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.