Share via:
பெருமழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நிவர்த்தி செய்வதாக கனிமொழி எம்.பி. தூத்துக்குடி மக்களுக்கு ஆறுதல் கூறி உறுதியளித்துள்ளார்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வரும் காரணத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீட்புப்படையினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மழைவெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் படகுகள் மூலம் பொது மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த அதிகனமழையால் வெள்ளநீர் தேங்கி பாதிக்கப்பட்ட பகுதிகளை கனிமொழி கருணாநிதி எம்.பி நேரில் பார்வையிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் காயல்பட்டினம் பகுதிகளுக்கு நேரில் சென்ற தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து பேசி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
மேலும் பொதுமக்களின் குறையை கேட்டறிந்த கனிமொழி எம்.பி., கூடிய விரைவில் அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதாக உறுதியளித்தார். அப்போது பெண்களுடன் கைகோர்த்து நடந்தபடியே பேச்சுவார்த்தை நடத்தினார். அதோடு அங்கிருந்த கைக்குழந்தையை தூக்கி கொஞ்சியதோடு சிறுவர், சிறுமிகளுடன் சிரித்து பேசி மகிழ்ந்தார்.