Share via:
தென் மாவட்டங்களை புரட்டிப்போட்ட கனமழையால் துண்டிக்கப்பட்ட திருச்செந்தூருக்கு சென்ற கனிமொழி எம்.பி. நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வரும் காரணத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக வரலாறு காணாத வகையில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீட்புப்படையினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மழைவெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் படகுகள் மூலம் பொது மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தை பொறுத்தவரை திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் கனமழை பெய்தது. மேலும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது.
இந்நிலையில் டெல்லியில் இருந்து விரைந்து தமிழகம் வந்தடைந்த கனிமொழி எம்.பி. தென் மாவட்டங்களில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் வரலாறு காணாத கனமழையால் நிலைக்குலைந்திருக்கும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்ற அவர், தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் மேற்கொள்ளப் பட்டுவரும் மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி பொதுமக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கியது பெரும் ஆறுதலை அளித்துள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கனிமொழி எம்.பி. பொதுமக்களின் குறைகளைக் கேட்டு அவற்றை நிவர்த்தி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.