Share via:
தெலுங்கானா கவர்னராக இருக்கும் தமிழிசை செளந்தர்ராஜனுக்கு கடந்த ஆட்சியிலும், இப்போதைய காங்கிரஸ் ஆட்சியிலும் மதிப்பு கொடுக்கப்படுவதில்லை. அதனால் அவ்வப்போது தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். மேலும், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் நின்று வெற்றி பெற்று அமைச்சராக வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார்.
இந்த நிலையில்தான் தமிழிசை எழுப்பிய குற்றச்சாட்டுக்கு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘உங்க அப்பன் வீட்டு காசையா கேட்கிறோம்..’ என்று காட்டமாக பதில் அளித்தார். அதன்பிறகு இருவரும் மாறி மாறி புகார் செய்து வருகிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழிசை செளந்தரராஜன், ‘மத்திய அரசிடம் நிதியை கேட்கும் விதம் என்பது ஒன்றுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டமுறை தவறு. மக்கள் வரிப்பணத்தை பற்றி அவர் பேசுகிறார். இன்றைக்கு எந்த மக்களின் வரிப்பணத்தில் இலாகா இல்லாத ஒரு அமைச்சரை தமிழகஅமைச்சரவையில் வைத்திருக்கிறீர்கள்?
அதுமட்டுமின்றி தமிழக அமைச்சர்களது பலரது வீட்டில்எடுக்கப்பட்ட பணம் யாருடைய வரிப்பணம், மக்களின் பணம் இல்லையா, தமிழகத்துக்கான நிதி தகுதியான நேரத்தில் வழங்கப்படாவிட்டால் அதற்கு குரல் எழுப்ப நானும் தயாராக இருப்பேன்’ என்று பேசி பரபரப்பை எழுப்பியிருக்கிறார்.
சமீபத்தில் நீதிமன்றத்தில் குட்டு வாங்கியதன் காரணமாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அமைதி காட்டிவரும் நிலையில், தமிழிசை தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறார்.
தமிழகத்துக்கு மட்டும் இரண்டு கவர்னர்களா என்று குரல் எழுப்பும் தி.மு.க. முக்கியப் புள்ளிகள் தமிழிசைக்கு எதிராக நீதிமன்றம் போவதற்கு ஆலோசனை செய்கிறார்களாம். மேலும், தமிழிசைக்கு எதிராக போராட்டமும் நடத்த முடிவு எடுத்திருக்கிறார்கள்.
அடுத்து என்ன நடக்குமோ..?