Share via:
தமிழகத்தில் இந்த ஒரே மாதத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 600ஐ கடந்துள்ளதாக கிடைத்துள்ள தகவல் பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவது தொடர்பாக நேற்று (செப்.28) மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழிகாட்டுதல்களை கடைபிடிக்கும்படி அறிவுறுத்தினார்.
இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்காக பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள வார்டுகளில் நாள் தோறும் 20 முதல் 30 பேர் வரை டெங்கு காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதன்படி தமிழகத்தில் இந்த ஒரு மாதத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 610 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே போல் நடப்பாண்டில் நேற்று வரை டெங்கு பாதிப்பு 4,454 ஆக பதிவாகியுள்ள நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதாரத்துறை டெங்கு பரவல் தடுப்பு நடவடிக்கைகளை அதிரடி மேற்கொண்டு வரும் போதிலும், ஒவ்வொரு பொது மக்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து தங்களை சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.