Share via:
தங்களுடைய பள்ளி நம்பர் ஒன் பள்ளியாக வேண்டும் என்று ஆசைப்பட்ட பள்ளி நிர்வாகம், 2ம் வகுப்பு மாணவனை நரபலி கொடுத்த கொடூர சம்பவம் உத்தரபிரதேச மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் டி.எல். பப்ளிக் ஸ்கூல் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இதன் பிரின்சிபல் மற்றும் நிர்வாகிகள் தங்களின் பள்ளி நம்பர் ஒன் பள்ளியாக மாறி பிசினஸ் வளர்ச்சி அடைய வேண்டும் என்று ஆசைப்பட்டு பிளாக் மேஜிக் உள்ளிட்ட மூடநம்பிக்கைகளில் தீவிரமாக இறங்கினர்.
அதைத்தொடர்ந்து பள்ளி விடுதியில் தங்கி பயின்று வரும் 11 வயதான 2ம் வகுப்பு படித்து வந்த மாணவனை நரபலி கொடுக்க முடிவு செய்தனர். அதன்படி திட்டம் தீட்டி முதல்முறை தோற்றுப் போன நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்.22) இரவு நேரத்தில் மாணவனை அழைத்துவந்து 5 பேரும் சேர்ந்து கொலை செய்துள்ளனர்.
பின்னர் மாணவனின் உடலை பள்ளி இயக்குனர் தனது காரில் மறைத்துவைத்தார். திங்கட்கிழமை வழக்கம் போல் பள்ளி இயங்க ஆரம்பித்தநிலையில் மாணவனை காணாமல் ஆசிரியர் தேடியுள்ளார். பின்னர் இது குறித்து போலீசாரிடம் அந்த ஆசிரியர் தகவல் சொல்லவே உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.
பள்ளிக்கு விரைந்து சென்ற போலீசார் நடத்திய தீவிர சோதனையில் பள்ளி இயக்குனரின் காரில் இருந்து சிறுவனின் உடலை மீட்டர். இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் முடிவில் 5 பேரும், சிறுவனை நரபலி கொடுத்ததை ஒப்புக் கொண்டனர்.
இதைத்தொடர்ந்து இந்த நரபலியின் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூடநம்பிக்கையின் காரணமாக 2ம் வகுப்பு மாணவன் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.