Share via:
ஆயுதபூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
வருகிற 23, 24 ஆகிய தேதிகளில் விஜயதசமி மற்றும் ஆயுதபூஜை கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு பண்டிகைக்கு முந்தைய நாட்களான சனி மற்றும் ஞாயிறு என மொத்தம் 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்துள்ளது.
சொந்த ஊர்களில் இருந்து படிப்புக்காகவும், வேலைக்காகவும் பல்வேறு ஊர்களில் தங்கியுள்ளவர்கள், விழா மற்றும் பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அப்படிப்பட்ட பயணிகளின் வசதிக்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.
இது குறித்து போக்குவரக் கழக அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஆயுதபூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் சேர்த்து இன்றும் (அக்.20), நாளையும் (அக்.21) ஆகிய நாட்களில் 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
அதே போல் பெங்களூரு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து பிற ஊர்களுக்கு மொத்தம் 1,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் கோயம்பேட்டை தவிர தாம்பரம் மெப்ஸ் மற்றும் பூந்தமல்லி பைபாஸ் பகுதியில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு 3 நாட்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர். தொடர் விடுமுறையை இன்பமாக கழிக்க நினைக்கும் பயணிகள் இந்த சலுகைகளை பயன்படுத்தி வருகின்றனர்.