Share via:
போதை பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சென்னையில் 22 போலீசாரை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னையில் பெருகிப் போயிருக்கும் போதைப் பொருள் புழக்கத்தை தடுத்து நிறுத்த சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். போதைப் பொருட்கள் புழக்கம் தொடர்பாக எழுந்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட போலீசார் குறித்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
ஏற்கனவே போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க தவறினாலோ அல்லது போதைப் பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்தாலோ அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.
இருப்பினும் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருந்த சென்னையில் 6 உதவி ஆய்வாளர்கள், 2 தலைமை காவலர்கள் மற்றும் 14 காவலர்கள் மீது சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நடவடிக்கை எடுக்க முடிவு செய்தார். அதன் அடிப்படையில் மொத்தம் 22 போலீசாரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.