Share via:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பொது மக்கள் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்டவற்றால் அவதிப்பட்டு வருவதால் இன்று 2,000 இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கன மழை கொட்டி வருகிறது. மேலும் டிசம்பர் 4ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று சொல்லப்படும் நிலையில், பொது மக்கள் சளி, இருமல், காய்ச்சல் மற்றும் மழைகால நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘‘வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே நடத்தப்பட்டு வரும் 1,000 இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள், தற்போது காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதால் இன்று அது 2,0000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் அதாவது கடந்த 5 வாரங்களில் இதுவரை 10,576 முகாம்கள் நடைபெற்ற நிலையில் 5 லட்சத்து 21 ஆயிரத்து 853 பொது மக்கள் பயன்பெற்றுள்ளதால் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மழைபொழிவு அதிகமாகியுள்ளதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி மதுரை, திருச்சி, கோவை, திண்டுக்கல் என தமிழகம் முழுவதும் இன்று கூடுதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெறும் இந்த இலவச சிறப்பு முகாம்களில் பொது மக்கள் மழையையும் பொருட்படுத்தாமல் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.