Share via:
காதல் விவகாரத்தில் 19வயது இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் அருகே உள்ள லட்சுமி நகரைச் சேர்ந்த சங்கர் என்பவருக்கு சுகேஷ் என்கிற 19 வயதான மகன் இருந்தார். இவர் காதலித்து வந்த ஒரு பெண்ணை கார்த்திக் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சுகேஷ் மற்றும் கார்த்திக் இடையே காதல் குறித்து தகராறு இருந்து வந்துள்ளது.
காதல் விவகாரம் குறித்து பேச்சு முற்றியதில் சுகேஷ், கார்த்திக்கை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்ததால் நடந்தவற்றை தனது தந்தை செல்வத்திடமும், அவரது மளிகைக் கடையில் வேலை செய்யும் பாலாஜி என்பவரிடமும் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த இவர்கள் உள்ளிட்ட 4 பேர் சுகேஷை இரும்பு ராடால் சரமாரியாக தாக்கியதில் சுகேஷ் படுகாயமடைந்தார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுகேஷ் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கொலை வழக்குப்பதிவு செய்த திருப்பத்தூர் டவுன் போலீசார், கார்த்திக் உள்ளிட்ட 4 பேரை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஒரே பெண்ணை இரு இளைஞர்கள் காதலித்ததால், யாருக்கு அந்த பெண் என்று எழுந்த வாக்குவாதத்தில் 19 வயது இளைஞர் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

